Saturday, October 29, 2016

கதிரேசன் முதன்முதலில் எழுதிய பதிவிற்க்கு நிறைய லைக்-கள், நிறைய   வாழ்த்துக்கள் கிடைத்தது.  சிலர் அவன் பதிவு தனக்கு மனகிளர்வை உண்டாக்கியதாக உணர்ந்தனர்.  சிலர் ஒருபடி மேலே போய் 'நவீன இலக்கியத்தின் விடிவெள்ளி' என புகழ்ந்தனர்.  பூரித்துப்போனான்.  இருப்பினும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

சில தினங்கள்  கழித்து, நிறைய ஆன்லைன் நண்பர்களிடமிருந்து அடுத்த பதிவு எப்போது என்ற கேள்விகள் எழத்தொடங்கியது.  தனக்கு இருக்கும் சமூக பொறுப்பை உணர்ந்தான்.

அடுத்த பதிவை எழுத வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானான்.  எதை பற்றி எழுதுவது என்று எண்ணினான்.  சமூகத்திற்கு நல்ல ஒரு படைப்பை கொடுக்க வேண்டும் என்ற சமூக பொறுப்பு அவனை இன்னும் சிந்திக்க வைத்தது.  ரெம்ப நேரம் சிந்தித்த பிறகும் ஒன்றும் மட்டுப்படவில்லை.  கடைசியில் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்தான்.

எழுத ஆரம்பித்தால் வார்த்தை வரவில்லை.  சிறிது பயம் தொற்றிக்கொண்டது. பலமணிநேர ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு, வார்த்தைகள் புலப்பட்டன.  சிறிது பெருமையுடனும், கனத்த மனதுடனும், அவன் எழுத ஆரம்பித்தான் "கதிரேசன் முதன்முதலில் எழுதிய பதிவிற்க்கு . . ."