Tuesday, June 10, 2014

சென்னையில் ஒரு வெயில் காலம்...

அன்று மதியம் வீட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். சூரியனின் தாபத்திற்கு முன் என் ஆணவம் அடங்கி தலை குனிந்தேன். என் மேல் தண்ணீர் விழுவதை உணர்ந்தேன். சுருங்கிய கண்ணோடு மேலே எட்டிப் பார்த்தேன். மாடி வீட்டு ஜன்னல் குளிரூட்டி அதன் வேலை பழு தாங்காமல் அழுதுகொண்டிருந்தது. என் தோளில் அதன் கண்ணீர்.  கடந்து, வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

வாசலில் இருந்த கரு நிற கேட் அன்று காலையிலிருந்து அடித்த வெயிலுக்கு சான்றாக வெப்பத்தை கக்கியது. இந்த வெயிலுக்கு ஒளிய விலக்கும் வெள்ளை வண்ணமும் கூட சூடாகத்தான் இருக்கும்.

நாம் நேராக சென்றாலும் நமக்கு பக்கவாட்டில் நடக்கும் நிகழ்வுகளை நாம் உணர்வோம். தெருவில் சிறுவர்கள் சுமார் நாற்பது டிகிரி வெயிலை சிறிதும் மதிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தெருவோரம் இருந்த மின் கம்பத்தில் ஒரு காலை வைத்து நாய் ஒன்று அதை ஈரம் செய்து கொண்டிருந்தது. நீரின் கொள்ளளவில் குளிர் சாதனப்பெட்டி வென்றது. ஆங்காங்கே இருந்த ஒரு சில மரங்களும் சிறிதும் அசையாமல் காணாமல் போன காற்றுக்காக காத்திருந்தன.

மெல்ல நடந்து கொண்டே மதிய சாப்பாடு சாப்பிட எங்கு போகலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். ஒட்டு மொத்த உடம்பை வெயிலில் அலைந்து வதைக்காமல், நாக்கையும் வயிற்றையும் பலிகடா ஆக்கி அருகிலிருந்த சுமாரான கடையில் சாப்பிடலாம் என் உத்தேசித்தேன். இது ஒரு தற்காலிக சாக்குப்போக்கு தான்.

சிறிய கடை. அதிக கூட்டம். சூடான சாப்பாடு. பரபரப்பாக இரண்டடிக்கொன்றென சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறிகள். கிடைத்த இடத்திலெல்லாம் மேஜை போடப்பட்டிருந்தது. சுறுசுறுப்பாக பரிமாறிக்கொண்டிருந்தனர். கடையினுள்ளே இருந்த வெப்பம் வெளியே இருந்த வெப்பத்திற்கு சளைத்ததல்ல.

ஒரு வழியாக சாப்பிட்டு வெளியே வந்தேன். பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் கடலை மிட்டாய் வாங்கி அதை கடவாய் பல்லிற்கு கொடுத்து அசை போட்டுக்கொண்டே வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தேன்.

தெருவில் சிறுவர்கள் இன்னும் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நாய் என் வீட்டு கால் மிதியில் தஞ்சம் புகுந்திருந்தது. நான் வந்ததும் உள் மனதில் திட்டிக்கொண்டே அடுத்த வீட்டு திண்ணைக்கு சென்றது. குளிர் சாதனப்பெட்டி தரையை நன்றாகவே நனைத்திருந்தது.

வீட்டிற்குள் நுழைந்தேன். ஒரு கடமையை முடித்த மன நிறைவு!

அன்பிற்கு நன்றி!

எத்தன ஈமெயில்! எத்தன SMS! நான் எழுதுன நாலு போஸ்ட்டுக்கு இப்படி ரசிகர்கள் இருப்பாங்கனு நெனச்சி பாக்கல. என் blog-ல அப்படி எது இவங்கள ஹெவியா லைக் பண்ண வச்சதுன்னு தெரியல.

இந்த அளவில்லாத அன்பிற்கு நன்றி!

இதுக்கு கைம்மாறு செய்ற மாதிரி நான் மறுபடியும் ப்ளாக் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். முன்னால "என் சில வரிகள்"-னு ப்ளாக் எழுதுனேன். அது ஏனோ நியூமராலஜி படி சரியா வரல. அதனால இப்ப ப்ளாக் பேரை "கோழி கிறுக்கல்"-னு மாத்திட்டேன். இந்த தலைப்பு ஆழ்ந்த சிந்தனைக்கு கெடச்ச அரும்பரிசு. சின்ன வயசுல நான் எழுறத பாத்துட்டு கோழி கிறுக்குன மாதிரி இருக்குனு எல்லாரும் சொல்லுவாங்க. இப்ப நான் எழுதுன நாலு போஸ்ட் பாத்ததும் எனக்கும் அதே தான் தோணுச்சி. அதனாலேயே இந்த தலைப்பை பிக்ஸ் பண்ணிட்டேன்.

முன்ன மாதிரி இனியும் இந்த blog-ல உருப்படியா ஒன்னும் இருக்காது. அதனால "எதிர்பாத்து வராத, ஏமாந்து போவாத..."